ஈரோடு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக பொறுப்பேற்ற குறிஞ்சி என்.சிவகுமார் நேற்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியின்போது தவறான கொள்கை முடிவினால் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு கேபிள் இணைப்பை செட் டாப் பாக்ஸில் வழங்க 36 லட்சம் செட் டாப் பாக்ஸ் வாங்கி, அதில், 26 லட்சம் செட் டாப் பாக்ஸ்க்கு மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 10 லட்சம் செட் டாப் பாக்ஸ்கள் எங்குள்ளது என தெரியவில்லை. அவற்றை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை அதிகமாக உள்ளது. இதனை பெறவும், இழப்புக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் இ சேவை மையங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். இவ்வாறு குறிஞ்சி சிவக்குமார் கூறினார்.